இலங்கைக்கு அவகாசம்: எதிர்க்கவேண்டும் இந்தியா! – அ.தி.மு.க. எம்.பி. வலியுறுத்து
போர்க்குற்ற விசாரணை தொடர்பாக இலங்கைக்கு அவகாசம் வழங்குவதற்கான தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. மைத்திரேயன் வலியுறுத்தினார்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்கு இலங்கை அரசு 2 வருட அவகாசம் கேட்டுள்ளது. இதற்கு அனுமதி அளிக்கும் வகையில், ஜெனிவாவில் நாளைமறுதினம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. இலங்கைக்கு ஆதரவான இந்தத் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று தமிழக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினை இன்று திங்கட்கிழமை எதிரொலித்தது. இப்பிரச்சினையை அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் எழுப்பினார்.
அவர் பேசும்போது,
“இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை அங்கு நம்பகமான விசாரணை நடத்தப்படவில்லை. தவறு செய்த ஒரு நபர்கூட தண்டிக்கப்படவில்லை.
இலங்கைக்கு மேலும் 2 வருட அவகாசம் அளிக்கும் தீர்மானம் மீது எதிர்வரும் 22ஆம் திகதி ஜெனி வாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சில நாடுகள் கொண்டு வந்துள்ள இந்தத் தீர்மானம் தமிழர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி விளங்குகின்றார். உண்மையில், அவர் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவரும் ஆவார். மோடியால்கூட தமிழர்களுக்கு நீதி வழங்க முடியாது என்றால், வேறு யாராலும் வழங்க முடியாது. எனவே, மார்ச் 22ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.