வில்பத்து சரணாலயத்துக்கு வடக்கே அமைந்துள்ள 04 பாதுகாக்கப்பட்ட வனங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்.
வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்கேயுள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய அனைத்து வனப்பகுதிகளும் இணைக்கப்பட்டு தனியான பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்கள் இணைக்கப்பட்டு வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ‘3அ’ பிரிவின் கீழ் ‘மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம்’ என பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு இன்று (24) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது ரஷ்ய விஜயத்தினிடையே கையொப்பமிட்டார்.
இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட காடுகளின் எல்லைகளை மாற்ற வேண்டுமாயின் வன பாதுகாப்பு கட்டளை சட்டத்துக்கமைய விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரால் தயாரிக்கப்பட்ட உத்தரவு ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டு, பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னரே மேற்கொள்ளலாம்.
அதற்கமைய மேற்குறித்த வனத்துக்கான உச்ச சட்டபூர்வ பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும்.
வில்பத்து சரணாலயம் மற்றும் அத்துடன் இணைந்துள்ள வனப்பகுதியில் அத்துமீறிய காடழிப்பு இடம்பெறுவதாக கடந்த காலங்களில் பல்வேறு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இருந்த போதிலும் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 2012/2013 காலப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ள வன காணிகளுக்கு மேலதிகமாக ஏனைய காடுகள் துப்பரவு செய்யப்படவில்லையென தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் 2016-12- 30 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளுடன் இணைந்ததாக உள்ள காடுகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்காக, பாதுகாக்கப்பட்ட வனங்களாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.