ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிகா சிறிசேன தனது அரசியல் பயணத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளார்.
இதற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன என்றும், அவை முடிவடைந்த பின்னர் தான் அரசியலில் களமிறங்குவதற்கான காரணத்தை விளக்கும் வகையில் அவர் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் தேர்ச்சிபெற்ற அவர் தற்போது வணிகத்துறையில் ஈடுபட்டுவரும் நிலையிலேயே அவற்றைவிடுத்து முழுநேர அரசியலில் இறங்கவுள்ளார்.
இதற்கான பிள்ளையார் சுழியாகவே ‘ஜனாதிபதி தந்தை’ என்ற நூலை பெருமெடுப்பில் அவர் வெளியிட்டுள்ளார்.
சத்துரிகா சிறிசேன இவ்வாறு முழுநேர அரசியலுக்குள் வந்தபிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மகளிர்துறையில் அவருக்கு முக்கிய பதவியொன்று வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், 2018இல் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என சு.கவின் பொலனறுவை மாவட்ட தொகுதி அமைப்பாளரொருவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் மாகாண சபைத் தேர்தல் ஊடாகவே தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து, அதில் வெற்றிநடைபோட்டு நாட்டின் அதிஉயர் அரசியல் பதவியையே வகித்தார். எனவே, இந்தப் பாணியில்தான் சத்துரிகாவும் தனது அரசியல் பயணத்தை ஆரம்பிப்பதற்கு வியூகம் வகுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராகக் களமிறங்கியவேளை, குடும்ப அரசியலுக்கு இடமளிக்கமாட்டார் என அறிவித்திருந்தார். எனினும், மைத்திரிக்குப் பிறகு அரசியல் வாரிசொன்று அவசியம் என சு.க. உறுப்பினர் முன்வைத்த யோசனையின் பிரகாரமே சத்துரிகா இந்த முடிவை எடுத்தார் எனவும் தெரியவருகின்றது.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின்போது நேரடியாகக் களத்தில் இறங்கி, உதவிகளை வழங்கி தான் அரசியலுக்கு வரவுள்ளார் என மறைமுக சமிக்ஞையை அவர் வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=M3jscVQr7y0