இலங்கையின் பொருளாதாரப் பின்னடைவுக்கான முழுக் குற்றத்தையும் முன்னாள் நிதியமைச்சரான ரவி கருணாநாயக்கவின் மீது சுமத்தமுடியாதென மஹிந்த அணியான பொது எதிரணியின் பேச்சாளரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:-
“ரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பொறுப்புகளை சரிவர நிர்வகிக்கவில்லை என்பது தெரிந்த விடயமே என்றபோதிலும் நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கு அவரே அடிப்படைக் காரணம் என்று கூறமுடியாது.
அரசின் பலவீனமான பொருளாதாரக் கொள்கைகளும் சீரற்ற நிர்வாகமுமே இந்தப் பின்னடைவுக்கான முக்கிய காரணிகள். ரவி கருணாநாயக்க பெயரளவுக்கு நிதியமைச்சராக இருந்தாரே தவிர, அவரது அமைச்சின் பூரண நிர்வாகமும் பிரதமரின் கையிலேயே இருந்துவந்தது.
ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக இருந்தபோது இலங்கை மத்திய வங்கியோ அல்லது ஏனைய வர்த்தக வங்கிகளோ அவரது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. பிரதமருக்கு நெருக்கமானவர்கள் மாத்திரமே நிதிக் கட்டுப்பாட்டுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்கள்.
திறைசேரியினதும் மத்திய வங்கியினதும் நிர்வாகம் பிரதமரின் தனிப்பட்ட அதிகாரத்திலிருந்து வந்ததால் நிதியமைச்சரால் பெரிதாக எதையும் சாதிக்கமுடியவில்லை என்பதுதான் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய உண்மை” – என்று தெரிவித்துள்ளார்.