மூன்று மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு எதிராக பொது எதிரணியான மஹிந்த அணி நீதிமன்றம் செல்லவிருப்பதாக தேர்தல்கள் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு எழுத்துமூல அறிவித்தலொன்றை அனுப்பியுள்ளது.
பொது எதிரணியின் சார்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டீ சில்வாவின் மூலம் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இவ்வருடத்தின் செப்டெம்பர் /ஒக்டோபர் மாதங்களில் பதவிக்காலம் நிறைவடையவுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தல்களும் அரசமைப்பின் 154 உ ஷரத்தின்கீழ் உடனடியாக நடத்தப்படவேண்டுமெனவும், எக்காரணத்தைக்கொண்டும் அந்தத் தேர்தல்கள் தாமதிக்கப்பட்டால் மேலதிக அறிவித்தல்கள் எதுவுமின்றி தாங்கள் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடரவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஒன்பது மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரேசமயத்தில் நடத்தப்போவதாகக் காரணங்காட்டி அமைச்சரவை பதவிக்காலம் முடிவடையவுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தல்களையும் ஒத்திவைத்திருக்கும் இந்நிலையில், பொது எதிரணி நீதிமன்றத்தை நாடுவது முக்கிய திருப்பமாகுமென அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.