புதிய அரசமைப்பொன்றை இயற்றும் தேசிய அரசின் முயற்சியைத் தோற்கடிப்பதற்கு இருமுனைத் தாக்குதலை நடத்துவதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீர்மானித்துள்ளது.
சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொது எதிரணி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றுமுன்தினம் கூடினர்.
கொழும்பு, விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்தவின் இல்லத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில், அரசமைப்பு மீளமைப்பு பணி, உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், வெளிநாட்டுப் பிரமுகர்களில் இலங்கைப் பயணம் உள்ளிட்ட விவகாரங்கள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
இதன்போதே புதிய அரசமைப்பொன்று இயற்றப்படும் முயற்சியைத் தோற்கடிக்கவேண்டுமென முடிவெடுக்கப்பட்டது என்றும், இதற்காக உள்ளே இருந்து ஒரு குழுவும், வெளியேறி மற்றுமொரு குழுவும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் என்று வீரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
“அரசமைப்பு நிர்ணய சபையில் என்ன நடக்கின்றது என்பதை அறிவதற்கும், தகவல்களைப் பெறுவதற்கும் ஒரு குழு அங்கு இருக்கவேண்டும். அப்போதுதான் இழுத்தடிப்புகளைச் செய்யலாம். வெளியேயுள்ள குழு அழுத்தங்களைப் பிரயோகிக்கமுடியும்.
எது எப்படியே புதிய அரசமைப்பு உருவாவதைத் தோற்கடிப்பதே எமது குறிக்கோள். இதற்காக இரண்டு வழிகளில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்” என்று இந்தச் சந்திப்பின் பின்னர் உதய கம்மன்பில எம்.பி. ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
“ஒரு குழு உள்ளேயும். மற்றைய குழு வெளியேயும் இருந்து செயற்படும். எது எப்படியோ அரசிலிருந்து 17 உறுப்பினர்கள் பொது எதிரணியுடன் இணைவார்கள். 3 உறுப்பினர்கள் என்னுடன் பேச்சு நடத்தியுள்ளனர். ஏனைய தகவல்களை தற்போது வெளியிட முடியாது” என்று முன்னால ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசமைப்பு நிர்ணய சபையிலிருந்து விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் 5 எம்.பிக்கள் வெளியேறியுள்ளனர். எனினும், பொது எதிரணி வெளியேறாது.
அதேவேளை, அரசமைப்பு நிர்ணய சபையின் வழிநடத்தல் குழுவில் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 21 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். அதில் பொது எதிரணியின் சார்பில் தினேஷ் குணவர்தன எம்.பியும், பிரசன்ன ரணதுங்க எம்.பியும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்தக் குழுவில் இருந்தும் மஹிந்த அணி வெளியேறாது.
அரசமைப்பு நிர்ணய சபையில் 225 எம்.பிக்களும் அங்கத்தவர்களாக இருக்கின்றனர். அதிலிருந்து எம்.பிக்கள் வெளியேறினால் அதன் நடப்பு சவாலுக்குள்ளாகுமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. மாற்றுவழி பற்றி அரசமைப்பு நிர்ணய சபையை ஏற்படுத்துவதற்காகப் பிரேரிக்கப்பட்ட பிரேரணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
எனவே, திங்கட்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இது பற்றி கலந்துரையாடப்பட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சபாநாயகர் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.