“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரும் சதி நடவடிக்கைகளை முறியடிப்பதற்காகவே எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது” என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியதாவது:-
“நாம் படையினரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே பயன்படுத்துகிறோம். ஆனால், நாம் அவர்களைக் கூலித் தொழிலாளிகள்போல் பயன்படுத்துகிறோம் என்று பஸில் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். அவர்களின் ஆட்சியில் படையினர் எவ்வளவு கேவலமாக நடத்தப்பட்டார்கள் என்பதை அவர் மறந்துவிட்டார். ஆனால், நாம் அப்படி நடத்தவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரும் சதி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் பெற்றோலியத் தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டம். அவர்கள் எரிபொருள் விநியோகத்தைத் தடைசெய்தனர். அதை முறியடித்து எரிபொருள் விநியோகத்தை நாம் அத்தியாவசிய சேவையாக மாற்றியுள்ளோம்.
இவ்வாறான அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரமே நாம் படையினரைப் பயன்படுத்துகிறோம். மக்களுக்குச் சேவைகளை வழங்குவதற்காக மாத்திரமே படையினர் களத்தில் இறக்கிவிடப்படுகின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
அதுமாத்திரமன்றி, மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரும் சதி நடவடிக்கைகளை முறியடிப்பதற்காகவே எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது” – என்றார்.