முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சத்தம் சந்தடியின்றி சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருக்கின்றது.
தனித்து இருவரும் சுமார் 45 நிமிட நேரம் மனம் விட்டுப் பேசியிருக்கின்றனர். புதிய அரசமைப்பு உருவாக்கம் உட்பட தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து அவர்கள் மந்திராலோசனை நடத்தியிருக்கின்றனர் எனத் தெரியவந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் அவரது கொழும்பு விஜேராம மாவத்தை இல்லத்தில் அவரை கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் நேரில் சென்று சந்தித்தார் இரா.சம்பந்தன்.
வேறு உதவியாளர்கள் எவருமின்றி மூடிய அறையில் இருவரும் சுமார் 45 நிமிட நேரம் உரையாடினர் என்று அறியவந்தது.
உரையாடலின் முடிவின்போது மஹிந்தவின் மனைவி திருமதி ஷிராந்தி ராஜபக்ஷவும் வந்து சந்திப்பில் கலந்துகொண்டு சம்பந்தனிடம் குசலம் விசாரித்து அவருடன் சற்று நேரம் உரையாடினார் எனவும் அறியவந்தது.