“நாட்டை இரண்டாகப் பிரிக்கும் புதிய அரசமைப்பும், படையினரைத் தண்டிக்கும் சர்வதேச நீதிபதிகள் குழுவும் வரப்போவது உறுதி” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த எமது நாடு இன்று பயங்கரமான ஒரு நிலைமையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது. சர்வதேசத்தின் சதி வலைக்குள் சிக்கி நாடு இப்போது சீரழிந்துகொண்டிருக்கின்றது.
நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. புதிய அரசமைப்பு நாட்டை இரண்டாகப் பிரிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்து நாம் பிரிந்துபோய்க் கிடந்த நாட்டை ஒன்றுபடுத்தினோம். ஆனால், இந்த ஆட்சியாளர்கள் மீண்டும் பிரித்துவைக்கப்போகின்றார்கள்.
அதுமட்டுமா, பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தித் தந்த எமது படையினரும் இப்போது ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களைத் தண்டிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. போலியான போர்க்குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக சர்வதேச நீதிபதிகள் இலங்கைக்கு வரவிருக்கின்றனர். சர்வதேச நீதிபதிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அரசு கூறினாலும் அனுமதிப்பதற்கான வாக்குறுதியை அரசு சர்வதேசத்துக்கு வழங்கியுள்ளது. இவ்வாறு ஐ.நாவுக்கு இரண்டு தடவைகள் வாக்குறுதி வழங்கப்பட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநராக சிங்கப்பூர் பிரஜையான மகேந்திரன் நியமிக்கப்பட்டதுபோல் வெளிநாட்டுப் பிரஜைகள் நீதிபதிகளாக நியமிக்கப்படமுடியும் என்று சுமந்திரன் எம்.பி. கூறுகின்றார். அதுதான் நடக்கப்போகின்றது. அதுமாத்திரமன்றி, பௌத்த மதத்துக்கு இருக்கின்ற முதன்மை அந்தஸ்தும் நீக்கப்படவுள்ளது” – என்றார்.