“நல்லாட்சி என்று கூறும் மைத்திரி – ரணில் அரசு தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கித்தான் ஆட்சிக்கு வந்தது. அதேவேளை, ஆட்சிக்கு வந்த பின்னர் ஐ.நாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இந்த அரசு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. எனவே, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழ் மக்களை தொடர்ச்சியாக இந்த அரசு ஏமாற்றினால் மஹிந்த அரசைப் போன்று இந்த அரசையும் வீட்டுக்கு அனுப்ப நேரிடும்.”
– இவ்வாறு வவுனியாவில் வைத்து மைத்திரி – ரணில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
வவுனியா சின்ன அடம்பன் பகுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நல்லாட்சி என்று கூறும் மைத்திரி – ரணில் அரசு தமிழ் மக்களுக்குச் சார்பான சில கருமங்களை ஆற்றியிருந்தாலும், அதில் முழுமையாக திருப்திகொள்ள முடியாது.
தமிழ் மக்கள் தமது காணிகளை மீட்பதற்காகவும், காணாமல்போனோரைக் கண்டறிவதற்காகவும் தொடர்ந்து போராடுகின்றனர். அதேவேளை, ஒரு சிலர் தமது அடிப்படை உரிமைகளுக்காகவும், பட்டதாரிகள் தமது வேலைவாய்ப்புக்காகவும் போராடி வருகின்றனர். ஆனால், இந்த அரசு இந்தப் போராட் டங்களில் அக்கறைகொள்ளாமல் இருக்கின்றது.
இவ்வாறான நிலைமை நீடித்து தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் தயவு தாட்சணையின்றி இந்த அரசையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும்” – என்றார்.