யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இதனால் நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் – பின் வீதியில் இன்று மாலை 5.30 மணியளவில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இதன்போது நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் (மெய்ப்பாதுகாவலர்கள்) காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து 10 துப்பாக்கி ரவைகள் மற்றும் கைத்துப்பாக்கியும் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தான் பயணித்த மோட்டார் சைக்கிளை கைவிட்டு பிறிதொரு நபரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தப்பிச் சென்றுள்ள நபரை கைதுசெய்யும் முயற்சியை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை. சந்தேகநபர் தப்பிச் செல்ல முயற்சித்தபோது வீதியில் பயணித்த பெண் ஒருவரை தள்ளி வீழ்த்தியுள்ளார். இதனால் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதியில் பொலிஸார், தடயவியல் நிபுணர்கள், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.
இதேவேளை, புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ரயல் ட்பார் தீர்ப்பாயத்தில் அங்கம் வகிக்கும் மூன்று நீதிபதிகளுள் மா.இளஞ்செழியனும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.