மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து சிறுமி பலி
பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பகுதியில், ஒன்றரை வயது நிரம்பிய சிறுமியொருவர் வீட்டின் மாடிப்படியிலிருந்து விழுந்து இன்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார்.
கமலதாசன் சீதையம்மாள் அவர்களின் இரண்டாவது புதல்வியான வஸ்மிளா எனும் சிறுமியே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமியின் தாயார் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோதே மேற்படி சம்பவம் இடம்பெற்றதுடன், உடனடியாக பாதிப்புக்குள்ளான சிறுமி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் குறித்த சிறுமி மரணமடைந்ததாக வைத்தியசாலை அதிகாரி தெரிவித்தார்.
பெற்றோரின் கவனயீனத்தினாலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சிறுமியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




