குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்குளம் – பேராறு வனப்பகுதியினுள் நீண்டநாட்களாக சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த காட்டு மரக்குற்றி வியாபாரம் பொலிசாரினால் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வனப்பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் வெட்டி குற்றிகளாக்கப்பட்ட நிலையில் 32 முதிரைமரக்குற்றிகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவத்தில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் மேலும் நால்வர் தப்பிச்சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் 10 தொடக்கம் 15 வட்ட அடிப்பரப்பினையுடைய 8 முத்திரை மரங்கள் வெட்டப்பட்டிருந்ததுடன் குறித்த தொழிலுக்காக பயன்படுத்திய 2 மின் வாள்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட இருப்பதுடன் குறித்த மரக்குற்றிகள் கும்பிறுபிட்டி வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைகளத்தில் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.