Saturday , June 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சம்பந்தனை அழைக்கிறார் கோட்டா! – ‘எலிய’ அமைப்பின் அடுத்த கூட்டம் பெருமெடுப்பில் கண்டியில் 

சம்பந்தனை அழைக்கிறார் கோட்டா! – ‘எலிய’ அமைப்பின் அடுத்த கூட்டம் பெருமெடுப்பில் கண்டியில் 

புதிய அரசமைப்பை உருவாக்கும் கூட்டரசின் முயற்சியை முறியடிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் உதயமாகியுள்ள ‘எலிய’ அமைப்பின் அடுத்த கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு தான் அழைப்பு விடுக்கவுள்ளார் என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
‘எலிய – ஒளிமயமான அபிலாஷைகள்’ என்ற பெயரிலான புதிய அமைப்பு அறிமுகம் செய்யும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த புதன்கிழமை மாலை பொரலஸ்கமுவவில் உள்ள விடுதி ஒன்றில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர்களான சமல் ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ மற்றும் கூட்டு எதிரணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், முன்னாள் இராஜதந்திரிகளான தமரா குணநாயகம், கலாநிதி தயான் ஜயதிலக, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த அமைப்புக்கு சிங்கள – பௌத்த மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு வலுத்துவரும் நிலையிலேயே வரலாற்று முக்கியத்துமிக்க இடமாகக் கருதப்படும் கண்டியில் அடுத்த கூட்டத்தை நடத்தவுள்ளனர். மகாநாயக்க தேரர்களின் ஆதரவையும் பெறும் நோக்கிலேயே கண்டி தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …