“அம்பாறை மாவட்ட மக்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படுமாயின், நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன்” என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “நல்லாட்சியை உருவாக்கிய தமிழ் மக்களுக்கான உரிமை இன்றும் கிடைக்காது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு- கிழக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை திறப்பதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் எவ்வித முயற்சிகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் தொழிலாளர்கள் நிர்க்கதியாக நடுவீதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி பெறுமதிமிக்க, வளம் மிக்க தொழிலாளர்களுக்கு உரிய காணிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலை மாற வேண்டும். அம்பாறை மாவட்ட மக்களின் இருப்புக்கள் உறுதிசெய்யப்பட வேண்டும். அதன்போதே இம்மக்கள் தலைநிமிர்ந்து நிற்கும் நிலை ஏற்படும்” என்றார்.