மனிதாபிமான போராட்டம் தீர்வின்றி தொடருமாயின், அது எமது இனத்தவரை வேறு வழிக்கு திசைதிருப்புவதற்கே வழிவகுக்கும்” என கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 66ஆவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தந்தையொருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனது ஆதங்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய அவர், “இந்த ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவதற்கு உரிமையுள்ள போதிலும், அதற்கு மதிப்பளிக்கப்படுகின்றதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில்தான் சில தவறுகள் நடந்தது என்று பார்த்தால், இந்த நல்லாட்சியிலும் அதே நிலைமைகளே தொடர்ந்து வருகின்றன.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற குப்பைமேட்டு அனர்த்தம் குறித்து அரசாங்கம் காட்டும் வேகம், எமது விடயத்தில் துளியேனும் இல்லை. இந்நிலையில், எம்மை மனிதர்களாகவேனும் இந்த அரசு மதிக்கிறதா என்று எண்ணத் தோன்றுகிறது.
இவ்வாறாக எமது பிரச்சினை தீர்வின்றி தொடர்வதானது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது இனத்தவரை வேறு வழிக்கு திசைதிருப்புவதற்கே வழிவகுக்கும்.
ஆயுத போராட்டத்தை அன்றி, மனிதாபிமான அடிப்படையிலான போராட்டம் நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணவே நாம் விரும்புகிறோம். ஆனால் இந்த மனிதாபிமான போராட்டத்திற்கு அரசாங்கம் மதிப்பளிக்கிறதா என்பதும் சந்தேகமாகவே உள்ளது” என்றார்.