கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு பரிசளிக்கப்படும்
கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு பரிசளிக்கப்படும் என ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் பேசிய நிலையில், சங்பரிவார் அமைப்புகள் ஏற்கனவே பலரது தலைகளை எடுத்துள்ளது என பினராயி பதிலடி கொடுத்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியின் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் குழு தலைவராக உள்ள குந்தன் சந்திரவாத் என்பவர், இன்று அங்கு நடந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு சிறந்த பரிசு அளிக்கப்படும் என சர்ச்சையை உருவாக்கும் விதமாக பேசியிருந்தார்.
சந்திரவாத்தின் பேச்சு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், “சங்பரிவார் அமைப்புகள் ஏற்கனவே பலரது தலைகளை எடுத்துள்ளது. அவர்கள் மிரட்டலுக்கெல்லாம் பயப்படப் போவதில்லை” என கூறினார்.
சந்திரவாத்தின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயளாலர் சீத்தாராம் யெச்சூரி, “சந்திரவாத்தின் பேச்சுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே மிரட்டல் விடுக்கிறது என்றால் அது மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு பாதுகாப்பு மற்றும் உதவிகளை பெற்றுக் கொள்ளும் என புரிந்து கொள்ள முடிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பெங்களூரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.-வுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதனால், கோபமடைந்த குந்தன் சந்திரவாத், பினராயி விஜயன் தலையை கொண்டு வருபவர்களுக்கு பரிசு என மேடையில் பேசியுள்ளார்.




