கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
ஸ்ரீலங்கா விமானப் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.
இதற்கமைய மக்களின் காணிகள் நாளைய தினம் கையளிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கடந்த எட்டு ஆண்டுகாளாக கையகப்படுத்தப்பட்டுள்ள பிலவுக்குடியிருப்பு கிராமத்திலுள்ள 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 31 ஆம் திகதி முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், குறித்த காணிகளை நில அளவை திணைக்கள அதிகாரிகள் இன்று காலை அளவீடு செய்தனர்.
இதனையடுத்தே காணிகள் நாளைய தினம் விடுவிக்கப்படும் என முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்தார்.




