ஏறாவூர் நகர சபையில் பணியாற்றிய நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்று பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த 73 ஊழியர்களுக்கு மீண்டும் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எச்.எம்.எம். ஹமீம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் மேற்கொண்ட நேர்முகத் தேர்வின் பின்னர், குறித்த ஊழியர்களுக்கு ஒப்பந்தம் மற்றும் பதிலீட்டு அடிப்படையில் குறித்த மீள்நியமனங்கள் நேற்று (திங்கட்கிழமை) வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதனால், ஏறாவூர் நகரசபையில் உள்ள வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதோடு, பணிகள் யாவும் இன்று முதல் சுமூகமாக இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார். அத்தோடு, ஏறாவூர் நகர தூய்மையாக்கல் பணியும் எந்தவிதமான தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஹமீம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தவர்களில் காத்தான்குடி நகரசபையில் கடந்த வாரம் 48 பேருக்கும், ஓட்டமாவடி நகர சபையில் கடந்த வாரம் 21 பேருக்கும் இவ்வாறு மீள் நியமனம் வழங்கப்பட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.