பிரபாகரனைச் சுட்டுக்கொல்ல, ராஜீவ் கட்டளையிட்டார் – கருணா
நம்பிக்கையிழந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொலை செய்யுமாறு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உத்தரவிட்டிருந்தார் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பிரபாகரன் இந்தியா சென்று, போரில் ஈடுபடுவதில்லை என சமாதான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு உறுதியளித்திருந்தார். எனினும், அக்காலப்பகுதியில் குறித்த ஒப்பந்தத்தினை மீறி, சீனன்குடா பகுதியில் பிரதேச பொலிஸ் நிலையத்தின் மீதும், அப்பகுதியில் இருந்த சிங்கள, முஸ்லிம் மக்கள் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இவ்வாறான தாக்குதல்கள் காரணமாக பிரபாகரன் மீதான நம்பிக்கையை தான் இழந்துவிட்டதாக ராஜீவ் காந்தி கூறியிருந்தார். இதேவேளை பிரபாகரன் மீது நம்பிக்கையில்லை எனவும், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறும் கட்டளை அதிகாரிக்கு அறிவிக்கும்படி, அச்சமயம் கொழும்பில் இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய ஜே.என். டிக்சித்திற்கு, ராஜீவ் இரகசிய பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்நிலையில், மேஜர் ஜெனரல் கிரான் கிங் இந்திய படையினர் ஒருபோதும் பின்னால் சுட மாட்டார்கள் என ராஜீவின் உத்தரவினை ஏற்க மறுத்ததினால் பிரபாகரனை கொலை செய்யுமாறு ராஜீவ் காந்தி பிறப்பித்த உத்தரவு அன்று அமுல்படுத்தப்படவில்லை என விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) மேலும் தெரிவித்துள்ளார்.

