நில மீட்பு போராட்டம் தொடர்பில் தீர்வுக்கு வலியுறுத்துவோம் – ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்
முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு அறவழிப் போராட்டம் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையில் கலந்துரையாடப்பட்டு முடிவுக்கு வலியுறுத்தப்படும் என, யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு அறவழிப் போராட்டம், எந்த முடிவுமின்றித் தொடர்வது மனவருத்தம் தருவதாக ஆயர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பில் விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 84 குடும்பங்களுக்குச் சொந்தமான காணி விடுவிக்கப்பட வேண்டுமென, மக்கள் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேவேளை புதுக்குடியிருப்பின் மையப்பகுதியில் பிரதேச செயலகத்தின் முன்னால் உள்ள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள 19 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டுமென அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தம் சொந்த நிலங்களில் கால் பதிக்கும் வரை நகரப்போவதில்லை என இம் மக்கள் மிக உறுதியாக இருப்பது எல்லாவகையிலும் நீதியானதும் நியாயமானதுமாகும்.
30 ஆண்டு கால கொடிய போர் முடிவடைந்து 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் நல்லாட்சி அரசாங்கம் தாமாகவே செய்திருக்க வேண்டிய ஒரு பணியை மக்கள் அறவழிப் போராட்டம் நடத்திவரும் நிலையில் அரசாங்கம் எந்தக் கவனமும் இன்றி இருப்பது கண்டிக்கதக்கது.
நல்லாட்சி அரசாங்கம் உடனடியாகவே இப்பிரச்சினைக்கு முடிவு காண விரைந்து செயற்பட வேண்டுமென அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பேரால் அரசாங்கத்துக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.
எதிர்வரும் 22ஆம் திகதி, இலங்கையின் அனைத்து மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்களும் கூடவுள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அமர்வில், இது பற்றி விரிவாகப் பேசி தீர்வு ஒன்றினை அடைய வலியுறுத்துவோம்” என ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.