ஜோசப் படை முகாமில் சித்திரவதைகள்: – ஜகத் ஜயசூரியவை கைதுசெய்யக் கோரிக்கை
“வவுனியா ஜோசப் முகாமில் பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு தெளிவான – உறுதியான ஆதாரங்கள் போதியளவு உள்ளன. இந்த முகாமின் பொறுப்பாளராகப் பணியாற்றிய இப்போதைய பிரேஸில் தூதுவர் ஜகத் ஜயசூரியவை விசாரணை செய்ய வேண்டும்.”
– இவ்வாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கோரியுள்ளது.
இது தொடர்பில் அந்த நிறுவனத்தின் தலைமைப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
“போரின் இறுதிக்கட்டங்களில் மிக மோசமான சித்திரவதைக் கூடமாக வவுனியா ஜோசப் முகாம் இருந்தது. இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டு மிகக் கொடூரமான சித்திவதைகளை அனுபவித்து தப்பித்தவர்களிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. 46 பேர் இவ்வாறு வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர். இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பாலியல் ரீதியாக கொடுமைகள் – வன்முறைகளை அனுபவித்தாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த முகாமில் படையினருடன் இணைந்து ஒட்டுக்குழுவாக – துணை ஆயுதப் படையினராகப் பணியாற்றிய தமிழர்களின் வாக்குமூலங்களும்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜோசப் முகாமில் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்கள் – ஒளிப்படங்கள் எமது அமைப்பு பெற்றுக் கொண்டுள்ளது. இவர்களை பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காண்பித்துள்ளனர். பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களில் இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவில் மேஜராக பணியாற்றியவர் ஒருவரும் உள்ளடங்குகின்றார். ஜோசப் முகாமுக்கு ஆள்களை கடத்தி வரும் நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவை வழிநடத்திய இராணுவத்தின் மூத்த அதிகாரியொருவர் பின்னர் ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையில் பணியாற்றியுள்ளார்.
இந்த முகாமுக்குப் பொறுப்பாக இருந்த, முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய பிரேஸில் தூதுவருமான ஜகத் ஜயசூரியவை இராஜதந்திரப் பதவியிலிருந்து திருப்பி அழைக்க வேண்டும். அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்” – என்று ஜஸ்மின் சூக்காவின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.