இஸ்லாமிய நாடுகள் இராணுவ கூட்டமைப்புக்கு தலைமையேற்பதற்காக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரஹீல் ஷெரிப் சவுதி அரேபியா புறப்பட்டு சென்றுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை முறியடிக்கும் விதமாக 41 நாடுகளின் ஒப்புதலுடன் “இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பு’ சவுதி அரேபியா தலைமையில் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையுடன், தீவிரவாதத்தை எல்லா விதத்திலும் ஒழித்துகட்ட இந்தக் கூட்டமைப்பு தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்புக்கு பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், மாலத்தீவுகள், பஹரைன் உள்பட தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள 41 நாடுகள் ஒப்புதல் தெரிவித்து இருந்தன.
இந்நிலையில், இஸ்லாமிய நாடுகள் இராணுவக் கூட்டமைப்புக்கு தலைமையேற்பதற்காக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரஹீல் ஷெரிப் சவுதி அரேபியா புறப்பட்டு சென்றுள்ளார்.
பாகிஸ்தான் அரசு தடையில்லா சான்றிதழ் அளித்த உடனேயே அவர் சவுதி புறப்பட்டுள்ளார். ரஹீலை வரவேற்க சவுதி அரேபியா தனி விமானத்தை அனுப்பியுள்ளது.
முன்னதாக, சவுதி அரேபியா தலைமையிலான 41 இஸ்லாமிய நாடுகளின் இராணுவக் கூட்டமைப்பு தீவிரவாதத்திற்கு எதிரானது. எந்தவொரு தனிப்பட்ட நாட்டிற்கும் எதிரானது அல்ல என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் தெஹ்மினா ஜன்ஜுவா கூறி இருந்தார். கூட்டணியின் படைகளுக்கு மேற்பார்வையாளராக ரஹீலை சவுதி அரேபியா கடந்த ஜனவரி மாதம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.