இறக்காமம் பிரதேச செயலகத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டுவரும் போஷாக்கு உணவுப் பொருட்கள் தரமற்றதாகவும், சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில், உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இறக்காமம் பிரதேச செயலகத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டுவரும் போஷாக்கு பொதி தொடர்பான முறைகேடுகள் தொடர்பில், இணைத்தலைவரான பொறியியலாளர் எஸ்.எல் மன்சூர் சபையில் முன்வைத்தார்.
அண்மைக்காலமாக வழங்கப்பட்டுவரும் போஷாக்கு பொதியிலுள்ள உணவுப் பொருட்கள் பழுதடைந்தும், சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளதாக எடுத்துரைத்தார்.
அதன்படி, இம்முறைகேடுகள் தொடர்பில் உடன் விசாரணை நடத்தி முறைகேடுகள் இடம்பெற்றிருப்பின் தகுதி, தராதரம் பாராது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.