இறக்காமம் பிரதேசத்தில் ஜந்து பேர் கொண்ட புத்தமதகுருமார் குழுவொன்று தனியார் காணியொன்றிற்குள் சட்டவிரோதமாக அத்துமீறி பிரவேசித்ததுடன் கட்டிடமொன்றையும் நிர்மாணிக்க முற்பட்டிருந்தனர்.
சட்டவிரோத சிலை நிறுவல் தொடர்பான சர்ச்சையை மீண்டும் முன்னெடுக்கும் வகையில், சட்டத்தை மீறும் வகையில் காணியினை சுற்றி சுத்தம் செய்தமை தொடர்பாக நேற்றைய தினம் (வியாழக்கிழமை) அப்பகுதி மக்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் நிலைமைகளை அவதானித்ததுடன் உரிய பொலிஸ் அதிகாரிகளுடனும் மேற்படி சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்துமாறு கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக சம்பந்தபட்டவர்கள் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தமனை பொலிஸார் தெரிவித்தனர்.