பிணை முறி விவகாரம்: மத்திய வங்கி ஆளுநரிடம் இன்று வாக்குமூலம்
மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணை முறி மோசடி குறித்து, மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
பிணை முறி குறித்து விசாரிக்கப்படவென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் வாக்குமூலம் வழங்கவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குறித்த மோசடி தொடர்பாக ஏற்கனவே கோப் குழு விசாரணை நடத்தி நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தபோதும் குறித்த விசாரணை தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து சுயாதீனமாக விசாரிக்கும் வகையில் ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்பட்டதோடு, குற்றமிழைக்கப்பட்டமை உறுதியானால் சம்பந்தப்பட்டவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவர் என ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.