இந்திய மீனவர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் இலங்கை விரிவான விசாரணை
இந்திய மீனவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான முறையில் இலங்கை விசாரணை நடத்தப்படவுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பெரும் இடையூறாக இருந்துவரும் கடல் எல்லை அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தொடர்சுற்றுப் பேச்சுவார்த்தையின் மற்றுமொரு பேச்சுவார்த்தை ஏப்பிரல் மாதம் நடைபெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் காத்திரிமான தீர்வினை எதிர்பார்க்கமுடியும் என்று பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஹர்ச டி சில்வா இன்று அராங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்திய மீனவரின் உயிரிழப்பு சம்பவம் கவலைக்குரிய விடயமாகும். இதனால் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதில் இந்தியாவிலிருந்து 1500 மீனவர்கள் 150 வள்ளங்களில் வருகைதரவுள்ளனர். இவர்களை நாம் அன்புடன் வரவேற்கின்றோம். மீனவ யாத்திரிகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கச்சதீவு கடற்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டு முதலமைச்சர் மீனவரின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக அறிக்கை விடுத்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் நால்வர் தாக்கப்பட்டதாக செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். அவ்வாறான தகவல்கள் எதுவும் இல்லை.
இலங்கை கடல் எல்லைப்பகுதியில் அத்துமீறி பிரவேசித்த 100 க்கு மேற்பட்ட மீன்பிடி வள்ளங்கள் கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் இவ்வாறான அத்துமீறல்களை தடுப்பதற்கு கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




