“ஜனநாயக விழுமியங்களுக்கு முரணான இரு வேறு நிலைப்பாடுகளுடன் கட்சி செயற்படுகின்றது. சட்டத்துக்கு மாறாகக் கட்சியிலிருந்து என்னை நீக்கினால் நீதிமன்றத்தை நாடுவேன். இருப்பினும் இன்னும் கட்சியில் ஜனநாயக விழுமியங்கள் இருப்பதாக நம்புகின்றேன்.”
– இவ்வாறு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.
அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு மறுத்துள்ளமையால் பா.டெனீஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ரெலோவின் உயர்மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கட்சியிலிருந்து உங்களை நீக்கினால் என்ன செய்யப்போகின்றீர்கள் என்று அமைச்சர் பா.டெனீஸ்வரனிடம் கேட்டதற்கு,
“எனது பக்க நியாயங்களை நான் கட்சிக் கட்டுப்பாட்டை மீறவில்லை என்பதை கடந்த 12ஆம் திகதி நடந்த கூட்டத்தில் தெளிவாகவே சொல்லிவிட்டேன். சட்டத்துக்கு மாறாகக் கட்சியிலிருந்து என்னை நீக்கினால் நான் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை” – என்றார்.