இலங்கைக்கு நேற்றிரவு பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் விவியன் பாலகிருஷ்ணன் கொழும்பில் இன்று முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
இரண்டு நாட்கள் பயணமாக கொழும்புவந்த அவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேற்றிரவு வரவேற்பளிக்கப்பட்டது.
இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அவர் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பையடுத்து இவ்விரு அமைச்சர்களும் இணைந்து கூட்டு ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தவுள்ளனர்.
அதன்பின்னர் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
அரசியல் தீர்வு, பொருளாதார நிலைமை மற்றும் வடக்கு, கிழக்கு மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தவுள்ளேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.