Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / எந்த இராணுவத் தளபதியின் மீதும் கைவைக்க இடமளியேன்! – சு.க.மாநாட்டில் மைத்திரி சூளுரை

எந்த இராணுவத் தளபதியின் மீதும் கைவைக்க இடமளியேன்! – சு.க.மாநாட்டில் மைத்திரி சூளுரை

போர்க்குற்றச்சாட்டு என்ற போர்வையில் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் மீதோ அல்லது எந்தவொரு இராணுவத் தளபதியின் மீதோ அல்லது நாட்டின் எந்தவொரு இராணுவச் சிப்பாய் மீதோ கைவைக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்று சூளுரைத்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
அத்துடன், புலிச்சார்பு அமைப்புகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அதன் நிழலாகச் செயற்படும் அரசசார்பற்ற அமைப்புகளின் தாளத்திற்கேற்ப தான் ஆடமாட்டார் எனவும் அவர் இடித்துரைத்தார்.
கொழும்பு கெம்பல் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:-
“முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீது போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை பற்றி பேசப்படுகின்றது. இது கடல்தாண்டிய பிரச்சினையாகும்.

எனினும், ஜகத் ஜயசூரிய மீதோ அல்லது எந்தவொரு இராணுவத் தளபதி மீதோ அல்லது எந்தவொரு இராணுவச் சிப்பாய் மீதோ கைவைப்பதற்கு எந்தவொரு வெளிநாட்டுக்கும், நபருக்கும், அமைப்புக்கும் இடமளிக்கமாட்டேன் என்பதை திட்டவட்டமாகக் கூறிவைக்க விரும்புகின்றேன்.
புலிகளிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு அதன் கைக்கூலியாகச் செயற்படும் சில அரசசார்பற்ற நிறுவனங்களே இத்தகைய  செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. அவற்றின் தாளத்திற்கேற்ப ஆடுவதற்கு நான் ஒருபோதும் தயாரில்லை.
சிறப்பாக இயங்கக்கூடிய சில அரசசார்பற்ற அமைப்புகளும் இருக்கின்றன. அவற்றுடன் இணைந்து சேவையாற்ற நாம் தயார்.
தேசிய அரசில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கம் வகிக்கும் வரையில் கட்சி மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லை என சில தரப்பினர் அறிக்கை விடுத்துள்ளனர்.
ஊஞ்சலாடுவதற்காகவோ அல்லது சங்கீத கதிரை விளையாட்டு விளையாடுவதற்காகவோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசில் இணையவில்லை. சர்வதேச நெருக்கடி, பொருளாதாரப் பிரச்சினை ஆகியவற்றிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காகவே கூட்டரசு அமைக்கப்பட்டது.
முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்தவேண்டாமென அப்போதைய எனது தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் அறிக்கையொன்றை கையளித்திருந்தேன். 6  விடயங்களை அதில் சுட்டிக்காட்டியதுடன், நாட்டில் அரசியல் மறுசீரமைப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தவேண்டும் எனவும் எடுத்துரைத்தேன். எனினும், சர்வதேச நெருக்கடி, கடன்சுமை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அவர் எவரினதும் கருத்துக்கு செவிமடுக்காமல் முன்கூட்டியே தேர்தலை நடத்தி  அதில் தோல்வியடைந்தார்.
அதன்பின்னர் அந்தச் சுமைகள் எமது தோள்களுக்கு வந்தன. அவற்றை எதிர்கொள்வதற்காகவே இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்தன.
கடந்த ஆட்சியின்போது நாட்டிலும், கட்சிக்குள்ளும் ஜனநாயகம் இருக்கவில்லை. ஆட்சிமாற்றத்தின் பின்னர் நாட்டிலும், கட்சிக்குள்ளும் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டது.
இருந்தும் வழங்கப்பட்டுள்ள ஜனநாயகத்தை  சுதந்திரத்தை சிலர் சரியாகப் பயன்படுத்துவதில்லை. அதைமீறும் வகையில் செயற்படுகின்றனர்.
எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. முகநூல் இணையத்தில் விமர்சனங்கள் என அது தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. அத்துடன், கட்சிக்குள்ளும் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை விமர்சிப்பதற்காகவே பயன்படுத்துகின்றனர். இந்நிலைமை மாறவேண்டும்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …