நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பம் கொண்ட காலநிலைக்கு ஈடுகொடுப்பதற்கு ஒவ்வொருவரும் அதிகளவில் நீர் பருகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சமிந்தி சமரகோன் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அதிக உஷ்ணத்தின் காரணமாக உடம்பின் செயற்பாடுகள் பாரிய தாக்கத்துக்கு உள்ளாகின்றன. இதனால், சளியுடன் கூடிய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமான காணப்படுகின்றன. சூடான காலநிலை காணப்படும் வேளைகளில் வெளிப்பயணங்களில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பும் ஒருவர் தனது முகத்தை கழுவிக் கொள்ளவேண்டும்.
குறிப்பாக மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களைத் தவிர்த்து கொள்ளவேண்டும். இக்காலப் பகுதியில் வேகமாக பரவும் இன்புளுவென்சா காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்தும், டெங்கு காய்ச்சலிலிருந்தும் பாதுகாப்புப் பெற்றுக் கொள்ளவேண்டும்” என சமிந்தி சமரகோன் மேலும் தெரிவித்துள்ளார்.