கொலையாளியே விசாரணை நடத்துவதா? சர்வதேச விசாரணையே ஒரே வழி! – கூட்டமைப்பு திட்டவட்டம்
“கொலையாளிகளே விசாரணை நடத்தினால் எப்படி நீதி கிடைக்கும். எனவே, இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை. நீதி, நியாயம் கிடைக்க வேண்டுமானால் சர்வதேச பங்களிப்புடனான விசாரணையே இடம்பெற வேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்று சபையில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:-
“இறுதிப்போரின்போது போராளிகள் பலர் படையினரிடம் சரணடைந்தனர். இதற்குரிய கண்கண்ட சாட்சியங்களும் இருக்கின்றன. ஆனால், சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், சரணடைந்தவர்கள் குறித்த தகவல்கள் இல்லை என்று கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அத்துடன், கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். நீதி அமைச்சரும் இதே கருத்தைத்தான் தெரிவிக்கின்றார். இந்த நாட்டில் சட்டமானது இருவேறு விதங்களிலேயே செயற்படுகின்றன. கடந்தகால சம்பவங்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
எனவே, சர்வதேச பங்களிப்புடனான விசாரணை அழுத்தத்தின் ஊடாகவே நீதியை நிலைநாட்ட முடியும். உள்ளகப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி கிடைக்காது” – என்றார்.

