நாளைய ஜெனிவா மாநாட்டுக்கு ஹர்ஷ டி சில்வா தலைமை
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மீது நாளை புதன்கிழமை விவாதம் நடைபெறும்போது, அரச தரப்புக் குழுவுக்கு பிரதி வெளிவிவாகர அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமை தாங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவர் இன்று ஜெனிவா நோக்கி புறப்பட உள்ளார்.
இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் சமர்ப்பித்துள்ள அறிக்கை மீதான விவாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாளை நடைபெறவுள்ளது.
நாளைமறுதினம் வியாழக் கிழமை இலங்கை தொடர்பான தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. இந்தநிலையில், தீர்மானம் நிறைவேற்றப்படும்போது, இலங்கைக் குழுவுக்கு பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவை தலைமை ஏற்குமாறு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கேட்டுக்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவே தலைமை தாங்குவார் என்று கூறப்பட்டது. இவ்வாறானதொரு நிலையிலேயே பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவை ஜெனிவா செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளது.