பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்: யாழ்.அரச அதிபர்
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென யாழ். அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று முதல், ஒருவார காலத்திற்கு மகளிர் தின வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்ற நடைபயணத்தில் கலந்துகொண்ட அரச அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்தோடு, பெண்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இன்றி சமவுரிமை வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்ட அரச அதிபர், இவற்றை வலியுறுத்தியே இந்த நடைபயணத்தை முன்னெடுத்ததாக மேலும் குறிப்பிட்டார்.
யாழ். பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, மாவட்ட செயலகம் வரை சென்ற குறித்த நடைபயணத்தில் யாழ். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், பெண்கள் அமைப்பினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.




