இந்தியா எம்மை நம்பவில்லை – கோத்தாபய ராஜபக்ச ஆதங்கம்
மேற்குலகின் தலையீடுகளால் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை இந்தியா நம்பவில்லை என்றும், மகிந்த அரசுக்கு எதிராக செயற்பட முடிவு செய்தது என்றும் ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவுடனான எதிர்கால உறவுகள் மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதனை தாம் ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டு இந்தியாவை அணுகியிருந்ததாக கூறியுள்ளார்.
துரதிஸ்டவசமாக இந்தியாவின் அரசாங்கம், காங்கிரசிடம் இருந்து பாரதிய ஜனதா கட்சியிடம் மாறியதாக குறிப்பிட்டுள்ள கோட்டபாய, புதிய அரசாங்கத்தின் சில அதிகாரிகள் சீனாவுடனான தமது உறவுகளை தவறாகப் புரிந்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு முறை இந்தியாவிலும், ஒரு முறை ஸ்ரீலங்காவிலுமாக இரண்டு தடவைகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலைச் சந்தித்ததாக கூறியுள்ள கோட்டபாய,
அந்தச் சந்தர்ப்பங்களில் அவர் ஸ்ரீலங்காவில் சீனாவின் முதலீடுகள் குறித்து தாங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று தன்னிடம் கூறியதாக குறித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்தி, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் என்னிடம் திட்டவட்டமாக கூறியதாகவும், கொழும்பு துறைமுக தெற்கு கொள்கலன் முனையத்தின் முழு செயற்பாடுகளையும் தம்மை மீளப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாகவும் கோட்பாய குறிப்பிட்டுள்ளார்.
இவை முக்கியமான விடயங்கள் என அவருக்கு விளக்கமளிக்க முயன்றதாக தெரிவித்த கோட்பாய, இந்தியாவுக்கு எதிராக எதையும் செய்வதற்கு, ஸ்ரீலங்கா மண்ணை பயன்படுத்த யாரையும் அனுமதிக்கமாட்டோம் என்று தாம் உத்தரவாதம் அளித்ததாக கூறியுள்ளார்.
சீனாவுடனான தமது உறவுகள் வித்தியாசமானது எனக்குறிப்பிட்ட அவர், சீனாவுடன் நீண்டகால இராஜதந்திர உறவுகளை வைத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் பொருளாதார அபிவிருத்திக்கு உதவக் கூடிய நிலையில் உள்ள ஒரே நாடு சீனா என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், அபிவிருத்தி அவசியம் தேவை எனவும் அதனால் இந்த உதவிகளை ஏன் தாம் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
துரதிஷ்டவசமாக அப்போது மேற்குலகின் தலையீடுகள் காரணமாக இந்தியா நம்பவில்லை என ஆதங்கம் வெளியிட்டுள்ள அவர், மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக செயற்பட இந்தியா முடிவு செய்ததாக குற்றம்சுமத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் சொல்லைக் கேட்கும் என்று குறிப்பிட்ட அவர், இந்திய வம்சாவளித் தமிழ்ச் சமூகத்தை இந்தியா கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.




