தமிழர்களின் நலனுக்காக உழைப்பதாக சிலர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் : ஸ்ரீநேசன்
ஜெனீவா தீர்மான விடயத்தில் தமிழர்களின் நலனுக்காக உழைப்பதாக சிலர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா தீர்மான அமுலாக்கத்திற்கு மேலதிக கால அவகாசம் கோரப்பட்டுள்ள நிலையில், கால அவகாசம் கேட்பதற்கும் கூட்டமைப்பிற்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வாகனேரி கோகுலம் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்ற விடயத்தில் முன்னுக்குப்பின் முரணான செய்திகளை வெளியிட்டு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை பிரித்தாளுகின்ற தந்திரோபாயங்களில் சில ஊடகங்கள் செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ச எத்தனை தடவையாவது ஜனாதிபதியாக வரலாம் என்ற வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதன்போது 163 பேர் தமது கையை உயர்த்தி ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.
சிலர் பயத்திற்கும், பணத்துக்கும் கையை உயர்த்தி இருக்கலாம் என்றும் அன்று கை உயர்த்தியவர்கள் இன்று ஜெனீவா தீர்மான விடயத்தில் தமிழர்களின் நலனுக்காக உழைப்பதாக ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் வலியுறுத்தியுள்ளார்.




