காத்தான்குடியிலும் டெங்கினால் 9 வயது சிறுமி பரிதாப மரணம்!
மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சலினால் சிறுமி ஒருவர் உரிழந்துள்ளார்.
புதிய காத்தான்குடி நூறானிய்யா மைய்யவாடி வீதியைச் சேர்ந்த ஜி.பாத்திமா ஹதீஜா (வயது – 9) எனும் சிறுமியே நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமையன்று, குறித்த சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றும் பயனில்லாததால், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிறுமியை சேர்த்துள்ளனர்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலிருந்து குறித்த சிறுமி, வியாழக்கிழமை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுமி டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார் எனவும், காத்தான்குடியில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரைக்கும் 36 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

