“கீதா குமாரசிங்க எம்.பி. தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சம்பந்தமாக எனக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக எழுத்துமூல அறிவிப்பு கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.”
– இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்றுக் காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல் என்பன நிறைவடைந்ததை அடுத்து, வாய்மூல விடைக்கான கேள்வி – பதில் நேரம் ஆரம்பமானது.
அப்போது, சபையில் கீதா குமாரசிங்க எம்.பியும் வீற்றிருந்தார். இது தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, “நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என கீதா குமாரசிங்கவுக்கு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பில் நீங்கள் எவ்வாறான நடவடிக்கையை எடுக்கப்போகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, “இந்த விடயம் சம்பந்தமாக எனக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை. இது சம்பந்தமான அறிவிப்பு கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.