அதிகாரத்தை கைப்பற்றுவதே கூட்டு எதிர்க்கட்சியின் நோக்கம் – அமைச்சர் கயந்த
வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி, நாடாளுமன்றத்தையும் குழப்பிடியத்து ஆட்சி அதிகாரத்தைக் விரைவில் கைப்பற்றுவதற்கே கூட்டு எதிர்க்கட்சி முயற்சிப்பதாக ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சரவை இணைப் பேச்சாளரும், நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அஸ்கிரிய பீட மாகாநாயக்கரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
கயந்த கருணாதிலக ஊழல், மோசடிகளுக்கு இந்த அரசாங்கம் இடமளிக்காது. எவரேனும் ஒருவர் மோசடியில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பாராபட்சமின்றி தண்டனை வழங்கப்படும். குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால் மாத்திரம் ஒருவரை குற்றவாளியென அறிவித்துவிடமுடியாது, அது நிருபிக்கப்படவேண்டும்.
அதற்காகவே விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. அத்துடன், தகவல் அறியும் சட்டமூலம் கொண்டுவந்தபின்னர் அதை நடைமுறைப்படுத்தாது அரசாங்கள் மூடிமறைக்கும் என்றே கூறப்பட்டது. ஆனால், பெப்ரவரி 3ஆம் திகதி முதல் அதை அமுல்படுத்தியுள்ளோம். எந்தவொரு அரசாங்க நிறுவனங்களிலும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மக்களின் பயணத்திலேயே நாடாளுமன்றம் நடத்தப்படுகின்றது. ஆகவே. நாடாளுமன்ற நேரத்தை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்த வேண்டியது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் கடமையாகும்.
ஆட்சி அதிகாரத்தை இழந்துள்ள எதிர்க்கட்சி அதை விரைவில் பெற்றுக்கொள்வதற்கே முயற்சிக்கின்றது. அதனால்தான் வீதியில் போராட்டங்களை நடத்தி மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்துகின்றனர். நாடாளுமன்ற அமர்வுகளையும் குழப்பியடிக்கின்றனர்.




