சர்வதேச தலையீட்டுடனான பொறிமுறையே தமிழர்களுக்கு நீதியை பெற்றுத்தரும் : ஜெனீவாவில் கஜேந்திரகுமார்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான உள்ளகப் பொறிமுறைக்கு வெளிநாடுளின் தலையீடு இருந்தால் மாத்திரமே நம்பகத்தன்மை தோற்றம் பெறும் என்றும் அதுவே, தமிழர்களுக்கு நீதியை பெற்றுத்தரும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34ஆவது அமர்வில், நேற்று (புதன்கிழமை) இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதியை நிலைநாட்டுவதற்கான உறுதிப்பாடு இலங்கை அரசிடம் இல்லை. கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் பிரகாரம் பொறுப்புக்கூறலுக்கான குறைந்த பட்ச கடமைகளைக்கூட இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக கைவிட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரை விட எந்தவொரு குறைந்தளவு அதிகாரம் கொண்ட நபராலும் தீர்மானத்தை கைவிடும் முடிவை எடுக்க முடியாது. வாய்மொழியில் எதனைக் கூறினாலும் தீர்மானத்திலுள்ள ஒரு கடப்பாட்டையேனும் அரசு நிறைவேற்றவில்லை.
இவ்வாறு எந்த அரசு தீர்மானத்தை தெளிவாக நிறைவேற்றவில்லையோ மற்றும் அதனை கடைப்பிடிப்பதற்கு முனைப்புப் காட்டவில்லையோ, அந்த அரசுக்கு ஐ.நா. மேலும் கால அவகாசம் வழங்குவதானது பாதிக்கப்பட்ட தரப்பினர் ஐ.நா. பேரவையின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாரதூரமாக தகர்த்துவிடுவதாகவே அமையும்.
இந்நிலையில், இலங்கையை சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய கஜேந்திரகுமார், அவ்வாறு இல்லாவிட்டால் சர்வதேச தனி நீதிமன்ற கட்டமைப்பின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதே நீதியை நிலைநாட்டுவதற்கான ஒரே வழியாக அமையுமென மேலும் அவர் தெரிவித்தார்.

