வடக்கு மாகாண முதலமைச்சரை, பதவியில் இருந்து அகற்றுவதற்கு தமிழரசுக் கட்சி செயற்படுவதனைத் தடுக்க, தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் தேசிய கொள்கைக்காக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார். அவரின் கொள்கைகளை அகற்றுவதற்கு தமிழரசுக் கட்சி, ஈ.பி.டி.பி மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு, தேசிய நலன்களை மையப்படுத்தி செயற்பட ஆரம்பித்த நாளில் இருந்து தமிழரசுக்கட்சியின் தலைமைக்கு துரோகியாக காணப்பட்டார்.
திருடர்களை காப்பாற்றுவதற்கு தமிழரசு கட்சி செயற்பட்டுக் கொண்டிருப்பதுடன், திருடர்களின் குகையாகவும் தமிழரசுக்கட்சி மாறியுள்ளது.
தமிழ் தேசத்தின் வாழ்வா சாவா என்ற நிலையில் தமிழ் மக்கள் அணிதிரண்டு, வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான சதியை முறியடிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும்.
தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்படுமென்பதுடன், தமிழ் மக்கள் பேரவையின் முடிவுகளுக்கு அப்பால், தமிழ் மக்கள் இந்தச் சதியினை முறியடிக்க அனைவரும் ஒன்றுபடவேண்டும்” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.