காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அழைப்புக்கு அமைய வடக்கு, கிழக்கில் இன்று நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு முழு ஆதரவு வழங்குவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் முன்னணியினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“போர்க்காலத்திலும், போரின் முடிவிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் போர் முடிந்து 8 வருடங்கள் கடந்துள்ள போதிலும்கூட எதுவும் தெரியாத நிலையே நீடிக்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள், தமது சொந்தங்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அரசு பொறுப்புக்கூற வேண்டுமென வலியுறுத்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கு எங்கும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டங்களைப் பலப்படுத்தும் வகையில் எமது முழுமையான ஆதரவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் ஆரம்பத்திலிருந்தே வழங்கி வருகின்றோம்.
இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள், பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று வடக்கு, கிழக்கு முழுவதிலும் ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்தக் ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்வதுடன், சகல பொது அமைப்புக்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், வர்த்தக நிலையங்களை மூடியும், பொதுப் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தியும் ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்” – என்றுள்ளது.