ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் மூலமாக நாட்டின் அரசியல் யாப்பை மீறும் நடவடிக்கைகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.
நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாட்டிற்கு விற்பனை செய்யும் இந்த செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் பொருளாதார ஆய்வு பிரிவு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் நாட்டின் இதுவொரு மிகப்பெரிய பகற்கொள்ளை எனவும் குற்றம்சாட்டினார்.
ஜீ.எல்.பீரிஸ் “சீனாவுடனான இந்த துறைமுக ஒப்பந்தம் அத்தியவசியமானது என குறிப்பிடுகின்றார்கள். அதனூடாக இந்த நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கே எதிர்ப்பார்க்கின்றனர்.
மஹிந்த ராஜபக்ச பாதுகாத்து வைத்திருந்த இந்த நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டிற்கு விற்பனை செய்கின்றனர். அந்த விற்பனை மிகப்பெரிய கொள்ளையாகும். இதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கின்றார்கள். அதனூடாக நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டுமென்ற நோக்கிலேயே இந்த அரசாங்கம் செயற்படுகின்றது.
இந்த கொள்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதிக்கின்றாரா என கேட்க விரும்புகின்றோம். எனினும் இவ்வாறான ஒரு இலாபமற்ற ஒப்பந்தத்தை மேற்கொள்ள எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இதற்கு முன்னர் தீர்மானித்ததில்லை. இது ஸ்ரீலங்காவின் அரசியல் யாப்பினை மீறும் ஒரு செயலாகும்.