வெளிநாட்டு நீதிபதிகளை ஒருபோதும் அனுமதியோம்: ஜனாதிபதி திட்டவட்டம்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் என்பதை மேற்குலக நாடுகளுக்கு தான் ஏற்கனவே கூறிவிட்டதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் உள்ள நீதிபதிகள் ஏனைய உலக நாடுகளின் நீதிபதிகளை விட கல்வியிலோ அனுபவத்திலோ ஆற்றலிலோ எந்தவகையிலும் குறைந்தவர்கள் அல்லர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பொலனறுவையில் புதிதாக அமைக்கப்படவுள்ள நீதிமன்ற கட்டத் தொகுதிக்கு நேற்று (சனிக்கிழமை) அடிக்கல் நாட்டிவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுயாதீனமும் பக்கச்சார்பற்றதுமான நீதிப் பொறிமுறையை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் நாட்டின் நீதித்துறைக்கு தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படாத வகையில் செயற்பட முடிந்தமை தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு, நீதித்துறையில் உள்ள அனைவரும் சுதந்திரமாகவும் திருப்தியுடனும் தமது கடமைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு சூழலை கட்டியெழுப்பும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, அடுத்த வாரம் தமது பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ள பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவனின் சேவைகளையும் ஜனாதிபதி இதன்போது பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பிரதியமைச்சர் துஷ்மந்த மித்ரபால, வடமேல் மாகாண முதலமைச்சர் பேசல ஜயரட்ன, பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




