விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் கட்டாயம்! – பிரிட்டன் உறுதி
நம்பகமான விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்கள், வழக்குத் தொடுநர்கள் அவசியம் இடம்பெறவேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.
கலப்பு நீதிமன்றப் பொறிமுறைப் பரிந்துரையை நிராகரித்து, இலங்கை அரசின் உயர்மட்டத் தலைவர்கள் அண்மையில் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள பிரிட்டன் தூதரகப் பேச்சாளர்,
“நம்பகமான நீதிப் பொறிமுறைகளின் மூலம், ஐ.நா. தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதையே பிரிட்டன் இன்னமும் எதிர்பார்க்கின்றது.
சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் நீதிப்பொறிமுறையை இலங்கை அரசு உருவாக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் அழைப்பு விடுத்துள்ளது.
நம்பகமான பொறிமுறைக்கு சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற நிறுவனங்கள் முக்கியமானது என்று அதில் உறுதியாகக் கூறப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்கள், வழக்குத் தொடுநர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இலங்கையில் மனித உரிமைகள் நிலையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இன்னும் செய்ய வேண்டியவை நிறையவே உள்ளன. இலங்கை அரசு தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு பிரிட்டன் தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளிக்கும்” – என்று தெரிவித்துள்ளார்.