தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த அபிவிருத்தியையும் மையப்படுத்தி ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் பேரம் பேசவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வனையும், இறுதி தீர்வினையும் பெறுவதற்கே போராடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்முனை – பெரியநீலாவணை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் விளையாட்டு போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் வீதாசாரத்தில் குறைவாக இருப்பதன் காரணமாக பொருளாதார ரீதியாக பல பின்னடைவுகளை சந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டிலே ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி இருக்கின்றது.
பெரிய நீலாவணை கிராமமானது எல்லையில் அமைந்திருந்ததன் காரணமாக இங்குள்ள மக்கள் பல்வேறு துன்பங்களை சந்தித்துள்ளனர்.
குறிப்பாக தமிழர்கள் வாழ்ந்த பல பிரதேசங்கள் உள்ள எல்லை கிராமங்கள் அழிக்கப்பட்ட வரலாறுகளே அதிகம் உள்ளன.
கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் மாகாணசபையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது ஒரு நல்லிணக்க அடிப்படையில் சேர்ந்து இயங்க வேண்டும் என்பதற்காகவே இயங்குகின்றோம் அப்படி இருந்த போதும் ஒரு சில விடயங்களை எங்களால் சாதிக்க முடியாத நிலையும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.