கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கையில் முதற்கட்டமாக 1700 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய பட்டதாரிகளுக்கான நியமனங்கள் கட்டம் கட்டமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளும் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் ஏனைய 3080 பட்டதாரிகளுக்கான நியமனங்களுக்கான போட்டிப் பரீட்சைகள் அடுத்த மாதம் முதலாம் வாரமளவில் இடம்பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
பட்டதாரிகளை ஆசிரியர் நிமயனத்துக்குள் உள்ளீர்ப்பது தொடர்பில் இன்று (புதன்கிழமை) மாகாண கல்வியமைச்சில் கல்வி அமைச்சர், கல்வியமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கூட்டமொன்று இடம்பெற்றது.
இதில் பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான பொறிமுறை குறித்து ஆராய்ந்து விடயதானங்களின் அடிப்படையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வது தொடர்பிலும் பிற விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக கல்வி அமைச்சின் அந்த உயர் அதிகாரி தெரிவித்தார். இவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் வாரங்களில் வழங்கப்படும் எனவும் கூறினார்.
கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட் அவர்களின் பகீரதப் பிரயத்தனம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் மற்றும் வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினை இரண்டிற்கும் ஏக காலத்தில் தீர்வு கிடைத்து விட்டதாகவும் அந்த அதிகார் மேலும் தெரிவித்தார்.
கிழக்கின் 4784 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்கு அண்மையில் தேசிய முகாமைத்துவ திணைக்களம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.