Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மஹிந்த தரப்பின் பொய்களை நம்பி ஏமாற வேண்டாம்! – ஆஸியில் வைத்து இலங்கையர்களிடம் மைத்திரி கோரிக்கை

மஹிந்த தரப்பின் பொய்களை நம்பி ஏமாற வேண்டாம்! – ஆஸியில் வைத்து இலங்கையர்களிடம் மைத்திரி கோரிக்கை

“அதிகாரத்தில் இருந்த சிலர் (மஹிந்த தரப்பினர்), மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக தாய்நாட்டுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையை விடவும் பொய் வேகமாக பரவுவதனால் அந்தப் பொய்ப் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என உலகெங்கும் வாழும் இலங்கையர்களிடம் கோருகின்றேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களை கென்பரா நகரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் கூறிய அவர்,

“புதிய அரசை ஆட்சிக்கு கொண்டுவந்த இலங்கை மக்களின் எதிர்பார்ப்பை உயர்ந்தபட்சம் நிறைவேற்றுவதற்காக பாடுபட்டு வருகின்றோம்.

சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதனை நிலைநாட்டுவதற்காக நாம் முயற்சித்து வருகின்றோம்.

அத்துடன், நாட்டு மக்களின் வாழ்க்கையை வளமாக்குவதற்காக தெளிவான அபிவிருத்தித் திட்டங்களையும், அனைத்து மக்களிடமும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தி, மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படாவண்ணம் நிலையான சமாதானத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிற்போக்குவாதிகள் அரசாங்கத்தை வெறுப்புக்குள்ளாக்கி, இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காக தாய்நாட்டுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமாதானத்தை உருவாக்குவதற்காக எப்போதும் அரசு தீர்மானங்களை மேற்கொள்வதுடன், எந்தவொரு கட்சியினரோ, சமயத்தினரோ, இனத்தவரோ சமாதானத்தை சீர்குலைக்க முற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் அரசு பின்னிற்காது.

எந்தச் சவால்கள் வந்தாலும் மக்களுக்காக அரசு முன்னோக்கிப் பயணிக்கும். அதற்கு தாய்நாட்டை நேசிக்கும் இலங்கைப் பிரஜைகளின் ஒத்துழைப்பு அவசியமாகும்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …