நேரடி வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்குள் உள்வாங்கப்பட வேண்டும்: பிரதமர் ரணில்
கடும் கடன் நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கை, நேரடி வெளிநாட்டு முதலீடுகளை உள்வாங்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்தார்.
700 கோடி அமெரிக்க டொலர்களை அடுத்த வருடத்தில் கடனாக செலுத்த வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரத்து 600 கோடி அமெரிக்க டொலர் கடனை அடுத்துவரும் 10 வருடங்களுக்குள் மீள செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், உள்நாட்டு முதலீடுகளினுடாக மட்டும் கடன்களை மீள செலுத்த முடியாது. அத்துடன், ஏற்றுமதி பொருட்களான தேயிலை, இறப்பர், தென்னை ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாகும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த காலத்தில் இறப்பர் இறக்குமதிக்கு அனுமதி வழங்கியதன் காரணமாக உள்நாட்டு இறப்பர் உற்பத்தியாளர்கள் மத்தியில் போட்டித் தன்மை குறைவடைந்துள்ளதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.




