ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவின் செயற்பாடு என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் விசேட விவாதத்தை நடத்துதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய ஒப்புதல் வழங்கியுள்ளார்.
கூட்டு எதிர்கட்சி விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்த விவாதத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டிற்கு எதிரான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய நாடாக ஸ்ரீலங்கா மாறியதாகவும் இது பாரதூரமான பிரச்சினை எனவும் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு தடைகள் வந்தாலும் நாட்டின் இராணுவ வீரர்களையும் பாதுகாப்பதற்கு தாம் கடமைப்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த வெற்றிவீரர்களை பாதுகாக்கும் வகையில் அவர்களை அரசாங்கம் நடத்தும் விதத்திற்கு எதிராகவும் சர்வதேச நீதிபதிகளை வரவழைக்க முடியாது என்பதை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கும் வகையிலும் பாரிய போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் தினேஷ் குணவர்தன மேலும் கூறியுள்ளார்.